Monday, May 30, 2011

தடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்பு



சமீபகாலமாக, குறிப்பாக 2008 - ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் தடுப்பூசி போட்டதன் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு அதிர்ச்சியான தகவல். அண்மையில் கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்த கே. வி. பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டக் கேள்விக்கு மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் கொடுத்த தகவல் தான் இது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

AEFI - Adverse Effect From Immunisation என்று சொல்லக்கூடிய தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட குழந்தைகள் மரணம் என்பது, 2001- ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 136 எனவும், அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் 2008 முதல் 2010 வரை 355 குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்கிற உண்மை மத்திய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மேலும் 2001 முதல் 2010 வரை தடுப்பூசி போடப்பட்டதால் மரணமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 2001 - ஆண்டு அப்படிப்பட்ட குழந்தை மரணம் இல்லை. அதே சமயத்தில் 2002 - ஆம் ஆண்டு ஆறு குழந்தைகளும், 2003 - ஆம் ஆண்டு 13 குழந்தைகளும், 2004 - ஆம் ஆண்டு 23 குழந்தைகளும், 2005 - ஆம் ஆண்டு 18 குழந்தைகளும், 2006 - ஆம் ஆண்டு 54 குழந்தைகளும், 2007 - ஆம் ஆண்டு 32 குழந்தைகளும், 2008 - ஆம் ஆண்டு 111 குழந்தைகளும், 2009 - ஆம் ஆண்டு 116 குழந்தைகளும், 2010 - ஆம் ஆண்டு 128 குழந்தைகளும் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது அரசே தரும் தகவல் என்றால் உண்மையான மரண எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். '

தடுப்பூசியால் உண்டாகும் குழந்தைகள் மரணத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் :

ஒன்று - இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1 - இன் ஆட்சிகாலத்தில் - இடதுசாரிகளின் கண்காணிப்பில் ஆட்சி நடந்தபோதே அன்புமணி ராமதாஸ் போன்ற சுயநலக்காரர்கள் மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படித்தான் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது மத்திய அரசுக்கு சொந்தமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 103 - ஆண்டுகள் வயதான Central Research Institute (CRI ), தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் இருக்கும் நூறு ஆண்டுகளைக் கடந்த Pasteur Institute of India ( PII ), சென்னையிலிருக்கும் அறுபது ஆண்டுகளைக் கடந்த BCG Vaccine Laboratory ( BCGVL ) போன்ற தடுப்பூசி நிறுவனங்களை 2008 -ஆம் ஆண்டு தன்னிச்சையாக மூடிவிட்டார் என்பது மட்டுமல்ல அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையே குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தியதால் தான் 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுக்குப் பிறகு மூடப்பட்ட அந்த நிறுவனங்கள் இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு - முன்பெல்லாம் ஒரு நாடு தடுப்பூசிகளோ, மருந்துகளோ புதிதாக கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அந்த கண்டுபிடிப்புகளை குரங்கு, எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனை செய்தபிறகு தான் அதன் வெற்றியை பொறுத்து மக்களுக்கு செலுத்துவார்கள். அப்படி செய்தால் மக்களுக்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ இருக்காது. ஆனால், இன்றைக்கோ அமெரிக்கா மற்றும் அதை சார்ந்த நாடுகள் புதிய தடுப்பூசிகளோ அல்லது புதிய மருந்துகளோ கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதை குரங்கு - எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனைச் செய்வதில்லை. நேரடியாக மனிதர்களுக்கே போட்டே சோதனை செய்கிறார்கள். அந்த மனிதர்கள் வேறு யாருமல்ல - இந்தியர்கள். அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் - சேரிகளில் வாழும் தலித் மக்களைத் தான் இன்றைக்கு சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான சோதனை என்பது மத்திய அரசின் அனுமதியில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை ( AIIMS ) -யில் தனியார் தயாரித்த புதியவகை தடுப்பூசி போடப்பட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்பதும் மறைக்க முடியாத உண்மை.

அண்மையில் சென்ற ஆண்டு, பெண்களுக்கு விலா எலும்பில் வரக்கூடிய cervical cancer என்கிற புதிய வகை புற்றுநோய்க்கு தடுப்பூசி புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருகிறது. அது ஒரு அமெரிக்க நிறுவனம் என்றும் சொல்லபடுகிறது. அப்படி கண்டுபிடிக்கப் பட்ட புதுவகை தடுப்பூசியை ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமங்களில் வாழும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட தலித் பெண் குழந்தைகளுக்கு போட்டு சோதனை செய்தார்கள். அதில் ஆறு பெண் குழந்தைகள் மரணமடைந்தார்கள். பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. அன்றைய தினம், பாராளுமன்ற மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் இந்த பிரச்சனையை எழுப்பி கண்டித்துப் பேசியதுமட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கு அந்த புதிய வகை தடுப்பூசி போடுவதை நிறுத்தவும் செய்தார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு தகவல்களும், நம் நாட்டு குழந்தைகள் மீதான மத்திய அரசின் அலட்சியத்தையும் , பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு காட்டுகிற அதீத விசுவாசம் நம் நாட்டுக் குழந்தைகளை பலி வாங்குகிறது என்பது தான் உண்மை.

தகவல்கள் : The Hindu / 29-05-2011

Saturday, March 19, 2011

உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள்

இந்தியாவில் காச நோயினால் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளவர்கள்எண்ணிக்கை 180 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 80 லட்சம் பேர் சளியில் கிரிமியுள்ள தீவிர காசநோயாளிகள் ஆவார்கள். உலகில் ஐந்தில் ஒரு பங்கு காச நோயாளிகள் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.எய்ட்ஸ் வியாதியுள்ள நோயாளிக்கு காச நோய் எளிதில் தொற்றிக் கொள்கிறது. காச நோய் ஒரு தொற்று நோயாகும். சளியில் கிருமியுள்ள காச நோயாளி வருடத்துக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காச நோ¬யைப் பரப்புகிறார்.

இந்தியாவில் மூன்று நிமிடத்துக்கு ஒருவர் காச நோயினால் இறக்கிறார்.காச நோயின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் 1993-ல் டி.பி என அழைக்கப்படும் காச நோயை உலகெங்கும் தீவிரமாக ஒழிக்க உடனடி நடவடிக்கையில் இறங்கி ஆலோசனைகளை வழங்கியதுடன், மருத்துவ தொழில் நுட்பத்தையும் உருவாக்கியது.இதன்படி திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் டாட்ஸ் சிகிச்சை மூலம் காச நோய் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் பல மையங்கள் துவக்கப்பட்டு ஒவ்வொரு மையத்திலும் தனி மருத்துவர்கள், ஆய்வுக் கூட நிபுணர், சுகாதார மேற்பார்வையாளர் பணியாற்றுகின்றனர். நோய் அறிகுறி உள்ள ஒருவருக்கு காலையில் முதலில் உருவாகும் சளி மற்ற நேரங்களில் உருவாகும் சளி என மூன்று முறை சளி பரிசோதனை செய்யப்பட்டு காச நோய் உறுதி செய்யப்பட்டு டாட்ஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

காச நோயாளிகளுக்கு டாட்ஸ் முறையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் இலவசமாக ஒரு மருந்து பெட்டியாக ஒதுக்கப்பட்டு 6 மாதம் முதல் 8 மாதம் வரை எடுத்துக் கொள்ளும் வகையில் அளிக்கப்படுகிறது. அதை நோயாளி ஒரு மருந்து அளிப்பவரின் முன்னிலையில் உட்கொள்ள வேண்டும். மருந்துகள் முழுமையாக மருத்துவர் அறிவுரைப் படி எடுத்துக் கொள்ளும் போது நோய் முற்றிலும் குணமடையும்.

காச நோயாளிக்கு நேரடியாக மாத்திரைகள் கொடுக்க முன் வரும் மகளிர் குழுக்கள், தனியார் மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு ரூ.250 ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் 2001 முதல் தீவிர காச நோய் தடுப்புத் திட்டம் 27 சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை 2 , 58, 562 நபர்களுக்கு சளிப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 23,740 நபர்கள் சளியில் கிருமியுள்ள காச நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 13,000 பேருக்கு காசநோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது.


1882-ம் ஆண்டு மார்ச் 24-ம் நாள் ஜெர்மானிய மருத்துவ அறிஞர் ராபர்ட் கோச் காசநோய்க்கான நுண்கிருமியை கண்டறிந்தார். அப்போது அவர் “இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்றாவிட்டால் எனது வாழ்க்கைக்கு அர்த்தமில்லை” என குறிப்பிட்டார். அது போல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காச நோயை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கியூபாவின் சாதனைகாச நோய் பாதிப்பு குறைவான நாடு என்ற அந்தஸ்தை கியூபாதான் பெற்றுள்ளது. சோசலிச அமைப்பின் சுகாதாரக் கொள்கைகளே இத்தகைய நிலைமை உருவானதற்குக்காரணமாக இருந்திருக்கிறது. கியூபாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களில் ஏழு பேர் மட்டுமே காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலக சுகாதாரக் கழகத்தால் 1971 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு மருந்தை தவறாமல் கியூபாவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு காச நோய்க்கு சிறப்பு மருத்துவர் இருக்குமளவுக்கு கியூபாவின் மருத்துவத்துறை பெரிய அளவில் முன்னேறியுள்ளது.

இது குறித்து கியூபாவின் பொது சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அன்டோனியோ ஃபிகியோரோ கூறுகையில், 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் நேரடி பலன்களில் இதுவும் ஒன்றாகும். மருத்துவத்துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைத் திட்டங்களே இத்தகைய சாதனைக்கு இட்டுச் சென்றன என்று குறிப்பிட்டார்.

Thursday, March 10, 2011

வலி நிவாரணி மருந்துகளால் லட்சம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு



வலி நிவாரணி மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக சிறுநீரக தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மருத்துவ கல்லூரியில் வியாழனன்று (மார்ச் 10) கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மருத்துவர்கள் இதனை தெரிவித்தனர். சிறுநீரக நோய் வருவதற்கு பல காரணம் இருந்தாலும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் நோய் இதற்கு முக்கிய காரணம். மேலும் மக்களின் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்நோய் அதிகரிக்கிறது.

முறையான கவனிப்பின்றி சிறுநீரக நோய் முற்று மானால் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அல்லது மாற்று சிறுநீரகம் என்பதை தவிர வேறு வழியில்லை.

விபத்தில் இறந்தோரின் சிறுநீரகம், மூளை செயல் இழந்தவரின் சிறுநீரகத்தை இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம். 2010ம் ஆண்டு மட்டும் 66 மாற்று சிறுநீரக சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆபத்தி லிருந்து தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் மக்கள் நல் வாழ்வு செயலர் சுப்புராஜ், மருத்துவமனை இயக்குனர் வம்சதாரா, கல்லூரி முதல்வர் கனகசபை, பேராசிரி யர்கள் கோபாலகிருஷ்ணன், அமால், மெய்யப்பன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

Thursday, February 17, 2011

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு தடை


பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' எனப்படும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை, இரைப்பை-குடல் மருத்துவம் தொடர்புடைய "டெகாசெராட்' மாத்திரை, மனநல மருத்துவம் தொடர்புடைய டீ-ஆன்சிட் மாத்திரை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' மாத்திரை, உட்கொண்டவுடன் திடீரென ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் அல்லது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

வயிறு உப்புசம்-மலச்சிக்கல்-அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னைக்கு உட்கொள்ளப்படுவது "டெகாசெராட்' மாத்திரை.

மன நல மருத்துவத்தில், ஆழ்ந்த மன வருத்தப் பிரச்னையைச் சரி செய்ய பரிந்துரைக்கப்படும் மாத்திரை "டீ-ஆன்சிட்' ஆகும்.

இவை பக்க விளைவுகளை ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கவும், விற்பனை செய்யவும் இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

மூட்டு வலி உள்பட பல்வேறு வலிகளுக்கு வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்பட்ட "நிமுஸ்லைட்' ஆன்டிபயாட்டிக் மாத்திரையும் பக்க விளைவு காரணமாக அண்மையில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் அலோபதி என்று அழைக்கப்படும் ஆங்கிலமுறை மருத்துவத்தில் புழங்கும் மாத்திரைகளாகும்